» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
யமுனை ஆற்றில் ரசாயன கழிவு கலப்பு: அச்சமின்றி புனித நீராடிய மக்கள்!
திங்கள் 8, நவம்பர் 2021 12:29:00 PM (IST)
யமுனை ஆற்றில் ரசாயன கழிவு கலந்துள்ள நிலையிலும், அதனை பொருட்படுத்தாமல் சாத் பூஜையையொட்டி மக்கள் நீராடினர்.
வட மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவில் ஒன்று சாத் பூஜை. சூரிய பகவானுக்கு நன்றி சொல்வதற்காக நடத்தப்படும் இந்த விழா 4 நாட்கள் நடைபெறும். சாத் பூஜையை பெரும்பாலும் பீகார், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே கொண்டாடுகின்றனர். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவார்கள். இந்த ஆண்டின் சாத் பூஜை இன்று தொடங்கியது.
இதையொட்டி நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி வழிபாடு நடத்தி வருகின்றனர். சாத் பூஜையையொட்டி டெல்லியில் 10ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி கலிந்தி கஞ்ச் அருகே யமுனா நதியில் பொதுமக்கள் நீராடி மகிழ்ந்தனர். யமுனையில் ரசாயனம் கலந்த நுரை பொங்கி வருவதையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீராடினர். இதனிடையே யமுனை ஆற்றில் ரசாயன கழிவு கலந்துள்ள ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.