» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
துபாயிலிருந்து கடத்தல்: கோழிக்கோடு ஏர்போர்ட்டில் ரூ.52 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்!
புதன் 3, நவம்பர் 2021 11:29:04 AM (IST)
கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.52 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடந்து வந்தன. தங்க கடத்தலை தடுக்க கேரள விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று அதிகாலை துபாயில் இருந்து கோழிக்கோடுக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர். இதில் ஒரு ஆண் மற்றும் பெண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பயணிகள் இருவரையும் அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இதில் பெண் பயணியின் கொண்டையை அவிழ்த்து பார்த்த போது அதில் 556 கிராம் தங்க கட்டி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.இதுபோல வாலிபர் அணிந்திருந்த ஷூவின் சாக்சுக்குள் 105 கிராம் தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.52 லட்சம் ஆகும். இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்ததாக காசர்கோட்டை சேர்ந்த ஜமீலா (வயது 36), கோழிக்கோட்டை சேர்ந்த பைசல் (22) ஆகியோரை கைது செய்தனர். இருவரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.