» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்கள் உருவான நாள் - ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
திங்கள் 1, நவம்பர் 2021 3:49:00 PM (IST)
அரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உருவான தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா விடுதலை அடைந்தபோது சமஸ்தானம், மாகாணம் என பல பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தன. சென்னை மாகாணத்தில் இப்போதைய ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநில பகுதிகள் இணைந்திருந்தன. பின்னர் 1956-ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபோது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் உதயமாகின. அதேபோல், வேறொரு மாகாணத்திலிருந்து பிரிந்து மத்திய பிரதேசம் மாநிலமும் உதயமானது.
பிறகு 1966 நவ.,1ல் கிழக்கு பஞ்சாபில் இருந்து அரியானா உருவாக்கப்பட்டது, ம.பி.,யில் இருந்து 2000ம் ஆண்டு நவ.,1ல் சட்டீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. இவை அனைத்தும் நவ.,1ம் தேதியே மாநிலங்களாக உருவானது. எனவே, இந்த நாளை அரசு விழாவாக அந்தந்த மாநிலங்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றன. அந்த வகையில், இந்த 6 மாநில மக்களுக்கும் பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 6 மாநில மொழிகளில் அம்மாநில மக்களுக்கு மாநிலங்கள் உருவான நாளுக்கான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மொழி வாரியாக மாநிலங்களாக உருவான நாளன்று ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கார், அரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில மக்களுக்கு எனது வாழ்த்துகள். இம்மக்களின் ஒளிமயமான எதிர்காலம் நல்ல முறையில் அமைய வாழ்த்துகள்.