» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வியாழன் 28, அக்டோபர் 2021 3:22:44 PM (IST)
இரண்டு மாணவர்களுக்காக 16 லட்சம் மாணவர்களுக்கான முடிவுகளை தாமதப்படுத்த முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 12-ந்தேதி நடந்தது. இதில் சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இந்தநிலையில் 2 மாணவர்கள் தங்களது வினாத்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவற்றில் உள்ள எண்கள் தவறாக பொருத்தப்பட்டதாகவும், கண்காணிப்பாளர்கள் தவறு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த வைஷானவி போபாலி, அபிஷேக் சிவாஜி ஆகிய 2 பேர் தங்களுக்கு நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 2 மாணவர்களுக்கும் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும், அதன் பின்னரே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மறுதேர்வு தேதி மற்றும் தேர்வு மையம் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு 48 மணி நேரத்துக்கு முன்கூட்டியே அறிவிக்கவும் அவர்களின் தேர்வு முடிவுகளை 2 வாரங்களில் வெளியிடவும் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் கண்காணிப்பாளர்கள் தவறு செய்துள்ளதை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அதில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்று நீதிபதி உத்தரவிட்டனர். மும்பை உயர்நீதிமன்ற விதித்த உத்தரவுக்கு தடை விதித்தனர். இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது:- 2 மாணவர்களுக்காக 16 லட்சம் மாணவர்களுக்கான முடிவுகளை தாமதப்படுத்த முடியாது. அவர்களின் நலன்களை சமநிலைபடுத்த வேண்டும். தேர்வு நாளில் ஏற்பட்ட குழப்பத்தால் நேரத்தை இழந்த 2 மாணவர்களுக்கு என்ன செய்வது என்பது குறித்த திட்டம் பற்றி தேசிய தேர்வு முகமை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.