» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை மர்ம மரணம்: கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!
வியாழன் 22, ஜூலை 2021 12:01:27 PM (IST)
கேரளாவில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சமூக ஆர்வலரான திருநங்கை அனன்யா குமாரி அலெக்ஸ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனன்யா குமாரி அலெக்ஸ். ரேடியோ ஆர்ஜேவாக இருந்து பலரை கவந்த அனன்யா LGBTQ+ பிரிவினர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் புதிதாக களம் கண்ட ஜனநாயக சமூக நீதிக் கட்சி (டிஎஸ்ஜேபி) சார்பில் மலப்புரத்தில் உள்ள வெங்காரா தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் அனன்யா குமாரி.
கேரளாவில் திருநங்கை ஒருவர் தேர்தலில் நிறுத்தப்பட்டது அதுவே முதல் முறை. சொந்தக்கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்புகள் வந்த நிலையில், கொலை மிரட்டல்களுக்கு உள்ளான இவர் கடைசி நிமிடத்தில் வேட்புமனுவை வாபஸ் வாங்கினார். சபரிமலையில் பெண்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்ற பிரச்சனையில் போராட்டங்கள் நடந்தபோது அனன்யா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாலின மாற்றத்திற்காக சில மாதங்களாக அனன்யா சிகிச்சை எடுத்து வந்தார். சமீபத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட இவருக்கு சிகிச்சைக்கு பின் பாதிப்புகள் ஏற்பட்டது. நடக்க முடியாத நிலையில் வலியால் வேதனைப்பட்டு, பணிகளை கவனிக்க முடியாமல் சிரப்பட்டு வந்தார். அறுவைசிகிச்சையின்போது நடந்த தவறால் கஷ்டப்படுகிறேன். எனக்கு உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று கொச்சியில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் அனன்யா.
அனன்யாவை சந்திக்க அவரின் வீட்டிற்கு சென்ற நண்பர்கள், அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அனன்யாவுக்கு அரசியல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் எதிர்ப்புகள் இருந்தன. உடல் வலி காரணமாக அனன்யா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று போலீஸ் விசாரணையில் தெரியவரும். அனன்யா தற்கொலை தொடர்பாக அவரது நண்பர்கள், சக திருநங்கைகள் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.