» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80% வழங்க சட்டம் இயற்ற வேண்டும் - ராமதாஸ்
வெள்ளி 18, பிப்ரவரி 2022 4:43:37 PM (IST)
தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களில் 80 விழுக்காட்டை தமிழக இளைஞர்கள் இளம் பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரியானா மாநில தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை உள்ளூர் மக்களுக்கே வழங்குவதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு இயற்றிய சட்டத்திற்கு அரியானா பஞ்சாப் உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு மூலம், அனைத்து மாநிலங்களிலும் உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
தனியார் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் அரியானா மாநிலத்தில் மட்டும் நடைமுறையில் இல்லை.ஆந்திரத்தில் தனியார் நிறுவன பணிகளில் 75 சதவீத உள்ளூர் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அதனால், கும்மிடிப்பூண்டியில் உள்ள தமிழக இளைஞர்கள், அங்கிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீ சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலையில் சேர முடியாது. தெலுங்கானாவில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கினால் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 80 சதவீத பணிகளும், ராஜஸ்தானில் 75 சதவீத பணிகளும், மத்திய பிரதேசத்தில் 70 சதவீத பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் பொதுத்துறை தனியார் துறை கூட்டு முயற்சி திட்டங்கள், சிறிய நிறுவனங்கள் ஆகியவற்றின் வேலைவாய்ப்புகளிலும் உள்ளூர் ஒதுக்கீடு உள்ளது. இதனால், இந்த மாநிலங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லை.
தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள ஆந்திரம், தெலுங்கானம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தமிழர்களுக்கு வேலை கிடைக்காது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ள வேலைகள் பிறமாநிலத்தவருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. அதைக் கட்டுப்படுத்த தமிழக ஆட்சியாளர்களால் முடியவில்லை.
இந்த நிலையை மாற்றி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் குறைந்தது 80 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது ,‘‘தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீத வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும்’’ என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய தமிழக அரசுக்கு உள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் கொண்ட பணிகளில் 80 விழுக்காட்டை தமிழக இளைஞர்கள் இளம் பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும். மார்ச் மாதத்தில் கூடவிருக்கும் சட்டப்பேரவையின் நிதி நிலை அறிக்கைக் கூட்டத் தொடரிலேயே இச்சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.