» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
விடா முயற்சியுடன் போராடினால் வெற்றி நிச்சயம் : மாணவர்களுக்கு எஸ்பி அறிவுரை
செவ்வாய் 22, மார்ச் 2022 8:21:14 AM (IST)
முழு மனதுடன் விடா முயற்சியுடன் போராடினால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி அடைய முடியும் என்று எஸ்பி பாலாஜி சரவணன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி சாயர்புரம் போப் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் 7 நாள் சிறப்பு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையேற்று துவக்கி வைத்து பேசுகையில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் இப்பகுதிகளில் உள்ள தேவைகள் மற்றும் பிரச்சனைகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும். பணம் எவ்வளவுதான் இருந்தாலும் சரி, பதவி என்னதான் இருந்தாலும் சரி சேவை மட்டும்தான அளவிடமுடியாதது.
நானும் படிக்கும்போது என்.எஸ்.எஸ் மாணவனாக இருந்தவன்தான் அதனால்தான் கூறுகிறேன். ஆங்காங்கே நமக்கு கிடைக்கின்ற ஊக்கங்கள்தான் நம் வாழ்கையின் முன்னேற்றத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். நம் முன்னேற்றத்திற்கு நமது குடும்ப சூழ்நிலை தடையில்லை. முழு ஈடுபாட்டுடன், முழு மனதுடன் விடா முயற்சியுடன் போராடினால் வாழ்க்கையில் நம்மால் நிச்சயம் வெற்றி அடைய முடியும் என்று கூறினார்.
இந்நிகழ்சியில் போப் கல்லூரி செயலர் தேவசகாயம், முதல்வர் இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆறுமுகம், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் உட்பட பொதுமக்கள் மற்றும் சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா, தனிப்பிரிவு தலைமைக் காவலர் மைக்கேல் ராஜா பிரதீஷ் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.