» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
அரசு கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா
வெள்ளி 18, மார்ச் 2022 9:20:42 PM (IST)
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019 - 2020 ஆண்டிற்கான முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் கல்லூரி முதல்வர் இரா. சின்னத்தாய் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி பங்கேற்று, வாய்ப்புக்கள் அதிகமாக இந்த உலகத்தில் இருக்கிறது. அதை அடையாளம் காணவேண்டும் என சிறப்புரையாற்றி அனைத்து மாணவிகளுக்கும் பட்டத்தினை வழங்கினார். அனைத்துத்துறை தலைவர்களும் தங்கள் துறைக்கானப் பட்டமளிப்பு விழா அறிக்கையினைச் சமர்பித்தனர். பட்டமளிப்பு விழாவுக்கான உறுதிமொழியை முதல்வர் கூற மாணவிகள் வழிமொழிந்தனர்.
வணிக நிர்வாகவியல் துறையில் இளங்கலை மாணவிகள் 40 பேரும், தமிழ்த் துறையில் இளங்கலை மாணவிகள் 52 பேரும், கணினி அறிவியல் துறையில் இளங்கலை மாணவிகள் 37 பேரும், ஆங்கிலத்துறையில் இளங்கலையில் 60 மாணவிகளும் முதுகலையில் 23 மாணவிகளும் பட்டம் பெற்றனர். மேலும் கணிதவியல் துறையில் இளங்கலை 43 பேரும் முதுகலையில் 19 பேரும், வணிகவியல் துறையில் இளங்கலையில் 44 மாணவிகளும், முதுகலையில் 21 மாணவிகளும் பட்டம் பெற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பழைய மாணவிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள், கணிதவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர்கள் தேன்மொழி, கோகிலா ஆகியோர் செய்திருந்தனர்.