» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்
சமச்சீர் கல்வியில் மட்டுமல்ல ... உணவிலும் தேவை..... ஆராய்ச்சியாளர்கள் கருத்து
ஒரு பானத்தையோ அல்லது விருப்பமான உணவையோ சாப்பிட்டு விட்டால் உடம்பிலும், மனத்திலும் உற்சாகம் கொப்பளித்து விடும். குறிப்பாக ஏதாவது ஒரு பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதை செய்யாவிட்டால் எதையோ இழந்தது போல் பரிதவிப்பார்கள். அதே நேரத்தில் அந்த பழக்கத்தை செய்தவுடன் உற்சாகம் கொப்பளிக்க தமது பணியில் விரைவாக செயல்படுவார்கள்.
இப்படி சாப்பிடும் உணவுகள் உண்மையில் உற்சாகத்தை கொடுக்கின்றனவா? ஆம்... என்று கூறுகின்றனர் உணவு ஆராய்ச்சியாளர்கள்.
காலையில் எழுந்தவுடன் சுறுசுறுப்பாக இருப்பதில்லை. தூக்கத்தின் காரணமாக மந்தமாக இருப்போம். ஒரு கப் காபியோ அல்லது டீயோ சாப்பிட்டவுடன் உற்சாகம் ஊற்றெடுக்கிறது.
மதியம் பிரியாணி அல்லது தயிர் சாதமோ சாப்பிட்டால் மூளை மந்தமாக இருக்கும். ஒரு கப் காபி சாப்பிட்டால் இரண்டு நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்கும். நாம் உண்ணும் உணவு நம் மன நிலையில் இம்மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
உணவு ஜீரணமாகும் போது உடலில் பல ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது மூளையை தாக்கி மனநிலையை மாற்றுகிறது. இந்த ரசாயனப் பொருட்களுக்கு நியூரோ டிரான்ஸ்மீட்டர்ஸ் என்று பெயர்.
நம் உணவில் இருந்து தயாரிக்கப்படும் முக்கியமான மூன்று ரசாயனப் பொருட்கள் செரோட்டோனின், டோபோமின், நார் எபினெபெரின் ஆகியவை.
உறுதியான உடலும், சுறுசுறுப்பான மனமும் இருக்க உணவு அவசியமாகிறது. ஆனால் அந்த உணவில் மாவுப் பொருள், புரதம், கொழுப்பு ஊட்டச் சத்துகள், தாதுப் பொருள்கள் அளவான நிலையில் சமச்சீர் உணவாக இருக்க வேண்டும்.
வேலைப்பளு அதிகரிக்கும்போது ஒரு கப் சூடான காபி அல்லது டீ சாப்பிட்டால் உடலுக்கும், மனதுக்கும் இதமாக இருக்கும். குறிப்பாக காபியில் உள்ள காபின் மற்றும் சூடான நிலை புத்துணர்ச்சியை உண்டாக்கும்.
சூடான காபியில் ஒரு மதுரமான வாசனை உண்டு. இந்த மதுரமான வாசனையை மூக்கு அனுபவித்து மூளைக்குத் தெரிவிக்கிறது. இந்த மூளையின் தாக்கம் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. ஆனால் அதிகமாக குடித்தால் மனச் சோர்வு ஏற்படும்.
சமச்சீர் உணவு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய நரம்புப் பாதைகளை ஊக்குவித்து உடலுக்கும், மனதிற்கும் இன்பமளிக்கிறது. பட்டாணி, அவரையில் கிடைக்கும் வைட்டமின் பி குறைந்தால் மனச் சோர்வு, நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கீரை வகைகளில் கிடைக்கும் இரும்புச்சத்து குறைந்தால் ஞாபக மறதி, உடல் சோர்வு, மனச்சோர்வு உண்டாகும்.
சோயாபீன்ஸ் போன்ற பொருட்களில் கிடைக்கும் தையாமின் மன அமைதி, நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும். குறைந்தால் மனத் தளர்ச்சி ஏற்படும்.
அரிசி, கோதுமை மற்றும் இனிப்புகளில் உள்ள மாவுப் பொருள் சக்தியைக் கொடுத்து மன அமைதியை ஏற்படுத்துகிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக மனமும் இதில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இதை அனைத்து வகை மருத்துவ முறைகளும் உறுதிப்படுத்துகின்றன என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்








