» சினிமா » செய்திகள்
ஹீரோவாக நடிக்கவில்லை: யோகிபாபு விளக்கம்! - தயாரிப்பாளர் காட்டம்!!
செவ்வாய் 6, டிசம்பர் 2022 11:39:26 AM (IST)
பணம் வாங்கிக் கொண்டு நடிக்க மறுத்ததாக நடிகர் யோகிபாபு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் புகார் கொடுத்துள்ளார்.
எனிடைம் மனி ஃபிலிம்ஸ் சார்பில் கின்னஸ் கிஷோர் தயாரித்து இயக்கியிருக்கும் படம், ‘தாதா’. யோகிபாபு, நிதின் சத்யா கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மற்றும் காயத்ரி, நாசர், மனோபாலா உட்பட பலர் நடித்துள்ளனர். அசோக் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கார்த்திக் கிருஷ்ணா இசை அமைத்துள்ளார். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் பேசும்போது, "வரும் 9-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. இதில், நான் நாயகனாக நடிக்கவில்லை. வெறும் 4 காட்சிகளில் மட்டுமே வருவதாக யோகிபாபு கூறிவருகிறார். அவர் இந்தப் படத்தில் 4 சீனில் மட்டும் நடித்திருந்தால் சினிமாவை விட்டு நான் போய்விடுகிறேன். 40 சீன்களுக்கு மேல் நடித்திருந்தால் அவர் சினிமாவை விட்டு போய்விடுவாரா?
வியாபார நேரத்தில் படம் வாங்க முன் வந்தவர்களுக்கு போன் செய்து வாங்காதீர்கள் என்று கெடுதல் நினைத்தார். எனக்கு இன்னொரு படம் நடித்துக் கொடுப்பதாகச் சொல்லி பணம் வாங்கியிருக்கிறார். அதைத் திருப்பித் தரவில்லை, நடிக்கவும் முன்வரவில்லை. அதனால் எனக்கு படம் நடித்துக் கொடுக்காத வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.