» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆஸ்திரேலிய ஓபன்: சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது!
செவ்வாய் 24, ஜனவரி 2023 4:20:50 PM (IST)
ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்றில் தோல்வியடைந்த இந்தியாவின் சானியா மிர்சா, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து விளையாடி வருகிறார். காலிறுதிச்சுற்றில் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி, லட்வியா - ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த ஜோடியுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் இந்த ஆட்டத்திலிருந்து அவர்கள் விலகியுள்ளதால் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி சிரமம் இன்றி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பிப்ரவரி மாதத்துடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா சமீபத்தில் அறிவித்தார். ஆறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் 35 வயது சானியா மிர்சா. இரட்டையர் பிரிவில் உலகளவில் நெ.1 வீராங்கனையாகவும் இருந்துள்ளார். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. 2021-ல் இரட்டையர் ஆட்டத்தில் 43-வது பட்டம் வென்றார். அடுத்த மாதம் பிப்ரவரி 19 முதல் நடைபெறவுள்ள துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிவிட்டு டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.