» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: உடன்குடி அணிக்கு முதல் பரிசு!
திங்கள் 17, ஜனவரி 2022 11:56:20 AM (IST)
ஆனந்தபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் இறுதிப் போட்டியில் உடன்குடி அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே ஆனந்தபுரத்தில் ஹெட் பீட் அணி சார்பில் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த 1ஆம் தேதி தொடங்கி 15ஆம்தேதி வரை நடைபெற்றது. போட்டியில் சாத்தான்குளம், உடன்குடி, ஆனந்தபுரம், பன்னம்பாறை, பழங்குளம் உள்ளிட்ட 21 அணிகள் கலந்து கொண்டன. முதல் நாள் போட்டியை வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வி. பார்த்தசாரதி தலைமையில் நகர காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் க. வேணுகோபால் தொடங்கி வைத்தார்.
இறுதி போட்டியில் உடன்குடி அணியும், ஆனந்தபுரம் அணியும் மோதின. இதில் உடன்குடி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச்சென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் து. சங்கர் தலைமை வகித்து முதல் பரிசு ரூ10 ஆயிரம் மற்றும் வெற்றிக் கோப்பையை தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி எஸ். அமிர்தராஜ் சார்பில் வழங்கினார்.
2ஆம் பரிசு பெற்ற ஆனந்தபுரம் அணிக்கு வெற்றி கோப்பை மற்றும் ரூ7001 ரொக்க பரிசை சாலைபாதுகாப்ப நுகர்வோர் குழு உறுப்பினர் ஹெச். போனிபாஸ் வழங்கினார். சாத்தான்குளம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பார்த்தசாரதி, சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ. லூர்துமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வடக்கு வட்டார துணைத் தலைவர் நல்லதம்பி, வடக்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் பவுல் ஞானராஜ், பழங்குளம் ஊராட்சித் தலைவர் செல்லக்கனிசெல்லத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.