» செய்திகள் » தமிழகம்

Share

கோவை சி.எஸ்.ஐ. நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்: மத போதகருக்கு அடி-உதை!

புதன் 28, ஜூலை 2010 10:09:54 AM (IST)

கோவை சி.எஸ்.ஐ. மறைமாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய போதகருக்கு அடி-உதை விழுந்தது. மைக்கும் உடைக்கப்பட்டது.
 
கோவை ரேஸ் கோர்சில் உள்ள சி.எஸ்.ஐ. பிஷப் பங்களாவில் கோவை சி.எஸ்.ஐ.மறைமாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிரதான தலைமை போதகர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் திருமண்டலத்திற்கு உட்பட்ட பாதிரியார்கள், நிர்வாகிகள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அஹ்ரகார வீதியை சேர்ந்த பெருந்துறை சேகர போதகர் எம். அகிலனும் கலந்து கொண்டார். கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பாதிரியார்கள் சார்பில் அகிலன் பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் சிலர் எழுந்து ஓடிச்சென்று, போதகர் அகிலனை தரக்குறைவாக பேசியதாகவும், மைக்கை பிடுங்கி உடைத்து அவர்மீது வீசியதாகவும், அவரது அங்கியை பிடித்து இழுத்து கிழித்து எறிந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இதனால் நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல் உருவானது. ஒரு பிரிவினர் அகிலனுக்கு ஆதரவாகவும், மற்றொரு பிரிவினர் அவருக்கு எதிராகவும் திரண்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போதகர் அகிலன் ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் டி.எஸ்.அமிர்தம், சாக்ரடீஸ், வில்சன் குமார், பிரின்ஸ் கால்வின், சாந்திபிரேம் குமார், அறிவழகன் மற்றும் சிலர் மீது இந்திய தண்டனை சட்டம் 143 சட்ட விரோதமாக கூடுதல், 294 (பி) மற்றும் 323 குற்ற நோக்கில் தாக்குதல், 506 (1) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இந்த பிரச்சினை குறித்து போதகர் அகிலன் கூறும்போது,என்னை மற்ற போதகர்கள் காப்பாற்றினார்கள். என்னை காப்பாற்றிய பாதிரியார்களின் கன்னத்திலும் அறை விழுந்தது. எனக்கும் அடி விழுந்தது. பின்னர் எனது அங்கியையும் கிழித்து எறிந்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அனைவரும், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றோம். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் தொடரும் செய்திகள்

ரஜினி மகள் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து!

வெள்ளி 3, செப்டம்பர் 2010 10:42:13 AM (IST)

Sponsored Ads