» செய்திகள் » தமிழகம்

Share

தேர்தல் விதிமுறை அனைவருக்கும் பொருந்தும்: பாமகவுக்கு அமைச்சர் வேலு அறிவுரை!

புதன் 10, மார்ச் 2010 10:22:07 AM (IST)

பென்னாகரத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வாகனத்தை போலீசார் நேற்று முன்தினம் சோதனையிட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பா.ம.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அதே சோதனைச் சாவடியில், உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வாகனத்தையும் போலீசார் நேற்று தீவிரமாக சோதனையிட்டனர். பின்னர் செய்தியார்களிடம் பேசிய அமைச்சர் வேலு,

தேர்தல் விதிமுறைகள் மற்றும் தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி, அனைத்து காவல் சோதனைச் சாவடிகளிலும், அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதனை செய்கின்றனர். அதுபோல தான் எனது வாகனத்தையும் சோதனை செய்தனர். அமைச்சராக இருந்தாலும், எம்.பி., எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், கட்சிகளின் தலைவர்களாக இருந்தாலும் அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.

அவர்கள் கடமையைச் செய்கின்றனர். இதில், எதிர்ப்போ, கருத்தோ தெரிவிக்க ஒன்றுமில்லை. ஆனால், ராமதாஸ் வாகனத்தை போலீசார் சோதனை செய்ய முயன்றபோது, அவர் உடன் வந்தவர்கள், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து, அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்; சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய செயல்பாடுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டதே. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, இத்தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து, தொகுதிக்கு உள்ளே வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டுமென, தேர்தல் கமிஷனுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என்று வேலு கூறினார்.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads