» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுத்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி
திங்கள் 30, ஜனவரி 2023 5:33:05 PM (IST)
குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 (போக்சோ சட்டம்), குழந்தை திருமணம் தடுத்தல், போதை ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மணக்குடி புனித அந்திரேயா கத்தோலிக்க ஆலயத்திலிருந்து ஆரம்பித்து St.Vincent de paul குருசடியில் நிறைவு பெற்றது. பேரணியை கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியில் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களை தடுத்தல், குழந்தை திருமணம் தடுத்தல், "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்”, போதை ஒழிப்புக்கான வாட்ஸ் அப் எண் 7010363173, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் பாலின தேர்வு நிலையற்ற குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பொதுமக்கள் ஏந்தி சென்றனர்.
பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மு.க. சகிலா பானு, மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, சாந்த குமாரி, அனைத்து மகளிர் காவல் நிலையம் கன்னியாகுமரி குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சொர்ணராணி, அருட்பணியாளர் வின்சென்ட் எட்வின், பங்குத் தந்தை அருட்பணி. அந்தோணியப்பன் மற்றும் கவுன்சிலர் மேரி கேத்தலின் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.