» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 24, ஜனவரி 2023 3:13:32 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலையில் பரவலாக லேசான மழை பெய்தது. இரவில் சற்று கூடுதலான மழை பெய்தது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இன்று காலையில் மெயின் அருவியில் ஆர்ச் மீது தண்ணீர் கொட்டியது. இதனால் முன்னெச்சரிக்கையாக மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
பழைய குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தாலும் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் புலியருவி, சிற்றருவி, ஐந்தருவியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பனிப்பொழிவுடன் மழை பெய்ததால் குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.