» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாக மாற்ற அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 13, ஆகஸ்ட் 2022 5:33:36 PM (IST)
குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாகவோ பிரச்சாரம் செய்யும் இடமாகவோ மாற்ற அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குமரி மாவட்டம், திங்கள் சந்தையை சேர்ந்த பாதிரியார் மரியா ஆரோக்கியத்திற்கு சொந்தமான குடியிருப்பு கட்டிடத்தில் கிறிஸ்துவ மத போதனை மற்றும் வழிபாடு நடத்தி வந்துள்ளார். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு வீட்டில் மதப் பிரார்த்தனை நடத்த தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த தடை உத்தரவை ரத்து செய்து தனது குடியிருப்பு வீட்டில் கிறிஸ்துவ மத போதனை நடத்த அனுமதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி விஜயகுமார் விசாரணை செய்து பிறப்பித்த உத்தரவில் "மனுதாரர் 1996 முதல் 2009 வரை தனது குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டிற்கு பயன்படுத்தி உள்ளார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த 80% மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரையின் அடிப்படையில் குடியிருப்பு வீட்டை மத பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசின் விதிமுறைப்படி குடியிருப்பு வீட்டை மத பிரச்சாரம் அல்லது வழிபாட்டு இடமாக மாற்ற அனுமதி இல்லை அவ்வாறு அனுமதி பெற வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியர் தான் அனுமதிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் தான் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க குடியிருப்பு வீட்டில் மதப்பிரச்சாரம் வழிபாடு செய்யக்கூடாது என தடைவிதித்து உள்ளார்.
மேலும் மனுதாரர் வீட்டிற்கு அருகிலேயே 200 மீட்டர் தூரத்தில் இரண்டு கிறிஸ்துவ ஆலயங்கள் வழிபாட்டுக்கு உள்ளது. 300 மீட்டர் தூரத்தில் இந்து வழிபாட்டுத் தலமும் உள்ளது. இதன் அடிப்படையில் சட்ட ஒழுங்கையும் அமைதியை பாதுகாப்பது மாவட்ட ஆட்சியரின் கடமை எனவே மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நீதிமன்றம் தடை விதிக்க வேண்டியது இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.