» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாடிகனில் மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் : போப் பிரான்சிஸ் வழங்கினார்
திங்கள் 16, மே 2022 11:21:09 AM (IST)
தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்தை கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புனிதராக போப் ஆண்டவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அவருடன் சேர்த்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 9 மறைசாட்சிகளுக்கும் புனிதர் பட்டம் வழங்கும் விழா ரோமில் வாடிகன் நகரிலுள்ள கத்தோலிக்க திருச்சபையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டத்தை போப் ஆண்டவர் வழங்கினார்.
புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் இவர் ஆவார். புனிதர் பட்டம் பெற்ற மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை, தமிழ்நாட்டின் முதல் புனிதர் ஆவார். இதனையொட்டி, ரோம் நகரில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இக்காட்சிகளை அங்கு சென்றுள்ள தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "இத்தாலியில் எதிரொலித்த தமிழின் பெருமை. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தமிழைப் பெருமைபடுத்தினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் கோட்டாறு, குழித்துறை மறைமாவட்டங்களில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, பிராத்தனைகள் நடைபெற்றன. ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் தமிழகத்தின் முதல் புனிதர் தேவசகாயம் என்னும் நிலையை போற்றி நன்றி கொண்டாட்டம் நடக்கிறது. இதையொட்டி ஜூன் 5ம் தேதி நன்றி தெரிவிக்கும் விழாவும் நடக்கிறது. முன்னதாக செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ் , செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.