» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மேல்மருவத்தூரில் கூட்ட நெரிசலை தவிர்க்க இணையதளம் மூலம் இருமுடி வழிபாடு
ஞாயிறு 9, ஜனவரி 2022 11:51:56 AM (IST)
கொரானா ஊரடங்கினால் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் இருமுடி கட்டி வரும் பக்தர்கள் பாதிப்படையாத வகையில் இணையவழி இருமுடி என்னும் சிறப்பு முறையை இந்த ஆண்டு மேல்மருவத்தூர் சித்தர்பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தைப்பூச விழாவை முன்னிட்டு இருமுடி விழா கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி தொடங்கி ஜனவரி 17ம் தேதி வரை நடைபெறுகிறது. கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்திருக்கும் ஆதிபராசக்தி சித்தர்பீடத்திற்கு பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற குடும்பம், குடும்பமாக பக்தியோடு விரதம் இருந்து இருமுடி கட்டி வந்தவண்ணம் உள்ளனர். மேல்மருவத்தூருக்கு இருமுடி அபிடேக செய்யும் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது குறிப்பிடதக்கது. இந்த வருடம் கோவிட் மற்றும் ஓமைக்ரான் ஊரடங்கு வழிகாட்டு அரசு நெறிமுறைகளை அறிவித்துள்ளதால் பக்தர்கள் முறையாக பின்பற்றி இருமுடி செலுத்தும் வகையில் சித்தர்பீடம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.
இந்நிலையில், தற்போது அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள கொரானா ஊரடங்கினால் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் இருமுடி கட்டி வரும் பக்தர்கள் பாதிப்படையாத வகையில் இணையவழி இருமுடி என்னும் சிறப்பு முறையை இந்த ஆண்டு சித்தர்பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், வெளிநாடுவாழ் பக்தர்கள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என நேரில் வந்து செலுத்த முடியாத பலதரப்பட்ட மக்களும் இந்த இணையதளம் https://www.acmectrust.org/donate/?type=ONLINE%20IRUMUDI மூலம் பெரும் பயன் அடைகின்றனர்.
கோவிட் காலத்தில் பக்தர்களின் நலன் கருதி இத்தகைய சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட ஆன்மிக இயக்க நிர்வாகத்தினை பக்தர்களும், பொதுமக்களும் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
மோனவல்லிJan 9, 2022 - 12:21:58 PM | Posted IP 162.1*****