» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திண்டுக்கல் பெண் கொலை வழக்கில் 4 பேர் சரண்!
வெள்ளி 24, செப்டம்பர் 2021 5:23:24 PM (IST)
பசுபதி பாண்டியன் கொலையில் தொடர்புடைய நிர்மலா தேவி தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் சரணடைந்துள்ளனர்.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பசுபதி பாண்டியன். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி திண்டுக்கல் அருகே நத்தவனப்பட்டியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பசுபதி பாண்டியனின் கொலை வழக்கில் தொடர்புடைய மூதாட்டி நிர்மலா (70), என்பவர் நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நிர்மலா கொலை வழக்கில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அய்யனார்(21), தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் திண்டுக்கல் அடுத்துள்ள கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த பெ.நடராஜன்(45), செம்பட்டி சீவல்சரகு பகுதியைச் சேர்ந்த பூபாலன்(21) ஆகிய மூவர் தாடிக்கொம்பு போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரமேஷ்குமார், சங்கிலி, தமிழ்ச்செல்வன், முத்துமணி ஆகியோர் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.