» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!

ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)



எட்டயபுரத்தில் போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விடுதியில் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் இருந்து கோவில்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் கோவில்பட்டி சரமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமசுப்பு மகன் சரவணன் (28) வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பள்ளிவாசல் தெருவில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்று அங்கிருந்த வியாபாரியிடம் 500 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார்.

அதனை கடைக்காரர் வாங்கி பார்த்தபோது போலியான நோட்டு என்பதை கண்டுபிடித்தார். மேலும் சரவணன் மது போதையில் இருந்த நிலையில், கடைக்காரர் உடனடியாக இதுகுறித்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரவணனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் வைத்திருந்த ரூபாய் நோட்டுகள் குழந்தைகள் விளையாடுவதற்காக கடைகளில் விற்கப்படும் போலி ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது.

அதில் ‘ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘சில்ட்ரன் பேங்க் ஆப் இந்தியா’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தான் வேலை செய்யும் அதே ஓட்டலில் மாஸ்டராக பணிபுரியும் அசாம் மாநிலத்தை சேர்ந்ததில்லி ராம் சர்மா மகன் குமார் சர்மா (45) என்பவரிடம் இதேபோல் நிறைய போலியான ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும் கூறினார்.

போலீசார், உடனடியாக ஓட்டலுக்கு சென்று விசாரித்தனர். மேலும் குமார் சர்மா தங்கியிருந்த விடுதியில் சென்று சோதனை நடத்தியபோது, கட்டுக்கட்டாக 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போலியான 500 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதனை புழக்கத்தில் விடுவதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சமையல் மாஸ்டர் குமார் சர்மா மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்தனர். போலி ரூபாய் நோட்டுகளை அவர்கள் வேறு எங்கும் புழக்கத்தில் விட்டார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாக வைத்து புழக்கத்தில் விட்ட சம்பவம் எட்டயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory