» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணிகள் : அமைச்சர் பி. கீதாஜீவன் ஆய்வு

வெள்ளி 9, மே 2025 5:28:19 PM (IST)



தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (09.05.2025), தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.

சமூகத்தில் வீடற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் சொந்தமாக குடியிருப்பு வசதி பெறுவதற்காக இலவச வீட்டுமனைப் பட்டா அல்லது வீடு வழங்க வேண்டுமென்பதே அரசின் கொள்கையாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு அரசாணை எண்.97 மற்றும் 205இன் கீழ் மாநகரப் பகுதியிலிருந்து 16 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்ளும், நகர்ப்புறப் பகுதியிலிருந்து 08 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்ளும் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி 5 வருடத்திற்கு மேல் குடியிருந்துவரும் நபர்களுக்கு சிறப்புத் திட்டத்தின்கீழ் வரன்முறைபடுத்தி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

அதுபோன்று, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் தகுதியுடைய நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் 5 இலட்சம் பட்டா வழங்கும் திட்டத்தின்கீழ் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதியில் மூன்று சென்ட் நிலமும், நகர்ப்புற பகுதியில் இரண்டு சென்ட் நிலமும், மாநகராட்சிப் பகுதிகளில் இரண்டு சென்ட் நிலமும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு நடைமுறையில் உள்ள விதிகளின்படியும், இதர நிபந்தனைகளுக்கு உட்பட்டும் இலவச வீட்டுமனை ஒப்படை செய்யப்படுகிறது. 

அந்தவகையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாநகர மற்றும் ஊரகப் பகுதிகளில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளை விரைவாக நிறைவு செய்து, பொதுமக்கள் பயன்பெறுவதை உறுதிசெய்யும் விதமாக ஊரக, நகர மற்றும் நத்தம் உட்பிரிவு மனுக்கள், முழுப்புலம் மற்றும் புல எல்லை மனுக்கள், தூத்துக்குடி மாநகரத்தில் இணையவழி நகர அளவை ஆவணங்களில் விடுபட்ட பெயர்களை சேர்க்கவும், சர்க்கார் நன்செய், புன்செய் நிலங்களை சரிசெய்தல், சர்க்கார் புறம்போக்கு இனங்களை மாவட்ட ஆட்சியர் அவர்களின் மூலம் நில அளவை இயக்குநருக்கு பிரேரணை அனுப்பவும், GR நத்தம் இனங்களை நிலஅளவை செய்திடவும் உள்ளிட்ட பணிகள் குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் வருவாய்த்துறை மற்றும் நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை எவ்வித தொய்வும் இன்றி விரைவாக நிறைவு செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ரவிச்சந்திரன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, உதவி இயக்குநர் (நில அளவை) சீனிவாசகன், தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன், மண்டல துணை வட்டாட்சியர், வட்ட துணை ஆய்வாளர், நகர சார் ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து

முருகன்மே 10, 2025 - 01:00:12 PM | Posted IP 172.7*****

தருமபுரி மாவட்டத்தில் எப்போது பட்டா கொடுப்பார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors

CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory