» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுமி பலி: 3 பேர் உயிருடன் மீட்பு; மற்றொரு சிறுமியை தேடும் பணி தீவிரம்!

வெள்ளி 17, ஜனவரி 2025 8:45:25 PM (IST)



முக்கூடல் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த சிறுமி உயிரிழந்தாள். மேலும் ஒரு சிறுமியை தேடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாக அர்ஜுனன், மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். நண்பர்களான இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே வேளார்குளத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றனர். 

முத்துமாலையம்மன் கோவில் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, 6 பேர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனை பார்த்ததும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக 4 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் நாக அர்ஜுனன் மகள் வைஷ்ணவி (13), அய்யப்பன் மகள் மாரி அனுஷ்யா (16) ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதுகுறித்து சேரன்மாதேவி, அம்பை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆற்றில் இறங்கி சிறுமிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணி நேர தேடுதலுக்கு பிறகு வைஷ்ணவி பிணமாக மீட்கப்பட்டாள். அவளது உடலை தீயணைப்பு வீரர்கள் கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், வைஷ்ணவி உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். 

தொடர்ந்து மற்றொரு சிறுமி மாரி அனுஷ்யாவை தீவிரமாக தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியாததல், அவரின் கதி என்னவென்று தெரியவில்லை. பின்னர் இரவு நேரமானதால், தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. சிறுமியை தேடும் பணி நாளை தொடரும் என போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணும் பொங்கலை கொண்டாட வந்த இடத்தில், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory