» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்திருவிழா: பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திங்கள் 5, ஆகஸ்ட் 2024 12:01:45 PM (IST)


தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்திருவிழாவின் விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) பனிமய அன்னையின் பெருவிழா கொண்டாடப்படுகிறது. 

தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய 442-வது ஆண்டு பெருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை பல்வேறு பங்கு மக்கள் சார்பில் திருயாத்திரை திருப்பலிகள், இளையோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள், பொது நிலையினர், துறவியர், நோயாளர்கள் என பல்வேறு தரப்பு மக்களுக்கான சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. மாலையில் செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது.

3-ம் திருவிழாவான கடந்த மாதம் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் மாபெரும் நற்கருணை பவனி நடந்தது. 10-ம் நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு செபமாலை, தொடர்ந்து பல்வேறு திருப்பலிகள் நடந்தன. இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் ஆலய வளாகத்தில் மட்டும் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) பனிமய அன்னையின் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு 2-ம் திருப்பலியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்புக் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. 


காலை 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில் மறைமாவட்ட மக்களுக்கான சிறப்பு திருப்பலியும், காலை 10 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்கான சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு தூத்துக்குடி மண்ணில் பிறந்து பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் அருட்தந்தையர்கள், துறவியர், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொள்ளும் சிறப்பு நன்றி திருப்பலி நடைபெற்றது.

மாலை 3 மணிக்கு செபமாலை மற்றும் நற்கருணை ஆசீ்ரும், தொடர்ந்து மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது. இந்த திருப்பலி முடிந்ததும் இரவு 7 மணிக்கு மேல் நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தூய பனிமய மாதா நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பவனியாக எடுத்து வரப்படுவார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டார்வின், உதவிப் பங்குத்தந்தை பாலன், அருட்சகோதரர் தினகரன் மற்றும் பங்கு பேரவையினர், பக்த சபையினர், இறைமக்கள் செய்துள்ளனர்.

திருவிழாவை முன்னிட்டு, நெல்லை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 


மாநகராட்சி சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. விழாவை முன்னிட்டு பொருட்காட்சி, கடை வீதிகளில் சிறப்பு தள்ளுபடி விற்பனை என தூத்துக்குடி மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors



CSC Computer Education





Thoothukudi Business Directory