» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு தமிழக அரசின் கலைநன் மணி விருது
சனி 25, மார்ச் 2023 10:59:59 AM (IST)
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு தமிழக அரசின் கலைநன் மணி விருது வழங்கப்பட்டது.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை மாவட்ட கலை மன்றம் சார்பாக 2021-22 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட அளவில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறந்த நாடக எழுத்தாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அறிவிப்பை மாவட்டக் கலை மன்ற தலைவரும் மாவட்ட ஆட்சியாளருமான மரு.கி.செந்தில்ராஜ், மாவட்ட கலை மன்ற செயலாளர் கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அறிவித்து இருந்தனர்.
இதற்கான விருது வழங்கும் விழா, மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடந்தது. இதையட்டி பள்ளியின் 25 வது ஆண்டு விழா, சவகர் சிறுவர் மன்றம் 24 ஆம் ஆண்டு விழா, தமிழிசை விழா ஆகிய முப்பெரும் விழாவாக தூத்துக்குடி டி.சவேரியார்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் வைத்து நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியார் அமுதா தலைமை வகித்து விருதுகளை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை சிவகாம செல்வி வரவேற்றார். பரதநாட்டிய ஆசிரியர் ரவிராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டு மையம் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் நாடக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட 15 பேருக்கு விருது மற்றும் பொன்னாடை போர்த்தி, பொற்கிழியும், பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தனது 7 வயது முதல் நாடகத்தில் நடித்து வருகிறார். மேடை நாடகம், ரேடியோ நாடகம், ஆவணப்படம், திரைப்படங்களில் பங்கேற்று வருகிறார். அரசு நடத்தும் தெரு நாடகம் போன்ற நிகழ்ச்சிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் ஆவணப்படம், கௌசானல் அடிகளாரின் ஆவணப்படும், வாக்காளர் விழிப்புணர்வு படம் உள்பட அரசு சார்ந்த பல நிகழ்வுகளில் நடிகராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி முடிவில் வயலின் ஆசிரியர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.