» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நகைக் கடையில் திருடிய 2பேர் கைது: 13.6 பவுன் தங்கம், 25 கிலோ வெள்ளி பறிமுதல்!
வியாழன் 23, மார்ச் 2023 7:58:21 PM (IST)
விளாத்திகுளம் அருகே நகைக்கடையில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அம்பாள் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (35). இவர் நகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் இவரது கடையின் பின்புறம் வழியாக 2 பேர் கயிறு வழியாக இறங்குவதை பார்த்த, அருகே உள்ள கடையின் இரவு காவலாளி நாகலாபுரத்தை சேர்ந்த நாகராஜ்(58) என்பவர், உடனடியாக போலீஸாருக்கும், நகைக்கடை உரிமையாளர் ராஜ்குமாருக்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில், அங்கு வந்த விளாத்திகுளம் போலீஸார் விரைந்து வந்து, இருவரையும் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது வெள்ளி பொருட்களும், தங்க நகைகளும் இருந்தன. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் விளாத்திகுளம் அருகே வள்ளிநாயகிபுரம் காலனி தெருவைச் சேர்ந்த மாரிமுத்து (34), மார்த்தாண்டம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (36) என்பது தெரியவந்தது.
மேலும், 2 நாட்களுக்கு முன்பே நகைகளை திருடுவதற்கு ஏதுவாக கதவுகளை உடைக்கும் கேஸ் கட்டர் இயந்திரங்களை நகைக் கடையின் மாடியில் கொண்டு வைத்துள்ளனர். அவர்கள் திட்டமிட்டபடி நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் கடையின் பின்புறம் வழியாக கயிறு மூலம் மாடிக்கு சென்று அங்கே இருந்துள்ளனர்.
பின்னர் அதிகாலை 2 மணிக்கு மேல் நகை கடையின் கதவுகளை கேஸ் கட்டர் இயந்திரம் மூலம் உடைத்து உள்ளே சென்று வெள்ளிப் பொருட்கள், நகைகள் மற்றும் பணத்தை திருடிக் கொண்டு வெளியே வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த திருடப்பட்ட மொத்தம் ரூ.21லட்சத்து 65ஆயிரம் மதிப்புள்ள 13 சவரன் தங்க நகைகள் மற்றும் 25 கிலோ வெள்ளி பொருட்களையும் கேஸ் கட்டர் இயந்திரம், மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.