» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மிளகாய் பயிர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும் : ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை!
திங்கள் 5, டிசம்பர் 2022 12:05:59 PM (IST)
விளாத்திகுளம் பகுதிகளில் மிளகாய் பயிர்களுக்கு அனைத்து விவசாயிகளுக்கும் 2020-2021ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் செயலாளர் பா.புவிராஜ் தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "2020 2021ம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக அனைத்து பயிர்களும் சேதமடைந்த நிலையில் பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்க போராட்டம் காரணமாக ராபி பருவ வேளாண் பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டது.
ஆனால் தோட்டக்கலை பயிரான மிளகாய் பயிருக்கு நீண்ட இழுபறிக்குப்பின் தற்போது விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் ஏற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விளாத்திகுளம் வட்டத்தில் புதூர், காடல்குடி வருவாய் கிராமங்களுக்கு மட்டுமே இதுவரை காப்பீடு விடுவிக்கப்பட்டுள்ளது. விளாத்திகுளம், வேம்பார், குளத்தூர், சிவஞானபுரம் உள்ளிட்ட விளாத்திகுளம் ஒன்றியம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்கப்பெறாமல் முழுமையாக விடுபட்டுள்ளது. அதிகம் மிளகாய் பயிரிடும் பகுதிகளை திட்டமிட்டு புறக்கணித்தது போல் விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
எனவே, தாங்கள் தலையிட்டு விளாத்திகுளம் ஒன்றிய பகுதி விவசாயிகளுக்கு விடுப்பட்டமிளகாய் பயிர்களுக்கு பயிர் காப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.மேலும், சராசரி என்ற பெயரில் விவசாயிகளை வஞ்சிக்காமல் மிளகாய் பயிரிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் 2020-2021 பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பு பருவத்தில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு பதில் தமிழக அரசே இன்சூரன்ஸ் கம்பெனி துவங்கி விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
S.MariappanDec 5, 2022 - 08:38:58 PM | Posted IP 162.1*****