» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில் நில பிரச்சனையில் பெண் தீக்குளிக்க முயற்சி : தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 30, நவம்பர் 2022 4:27:38 PM (IST)
தூத்துக்குடியில் கோவில் நில பிரச்சனையில், நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் அருகில் உள்ள பெரியநாயகபுரம் கிராமத்தில் சுடலைமாட சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள 45 சென்ட் நிலம் தனக்கு சொந்தமானது என அதே பகுதியைச் சேர்ந்த தேவசகாயம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி நிலத்தை அளவீடு செய்யுமாறு தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தாசில்தார் செல்வகுமார் மற்றும் நிலஅளவீடு செய்யும் அதிகாரிகள் இன்று காலை அங்கு சென்றபோது கிராம மக்கள் சிலர் நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பிராட்டி (50) என்பவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்தனர். இதன் விபரம் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் எதிரொலியாக புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.