» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோயிலை இடிக்க எதிர்ப்பு : பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
செவ்வாய் 29, நவம்பர் 2022 4:26:31 PM (IST)
அம்மன்புரம் அருகே கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையிலும் குவிந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், அம்மன்புரம் அருகே உள்ள சோனகன்விளை நாலாயிரமுடையார் குளக்கரையில் அய்யா வைகுண்டர் கோயில் உள்ளது. இந்த கோயில் பொதுப்பணித்துறைக்கு சம்பந்தமான குளக்கரையில் இருப்பதாக அங்குள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் பொதுப்பணித் துறையிடம் புகார் மனு அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் அந்த கோயிலை அகற்ற முடிவு செய்தனர்.
இதற்கிடையே அக்கோயிலின் நிர்வாகி நரசிம்மன், கோயில் ஊருக்கு சொந்தமான இடத்தில் ஊர் மக்களிடம் அனுமதி பெற்ற பின்னர்தான் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் வழிபட்டு வருவதாகவும், பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் போன்ற திருப்பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டிலும் மனு அளித்துள்ளார்.
இந்த மனு விசாரணை டிச.2ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் பொதுப் பணித்துறையினர் இந்த கோயிலை நீங்களே அகற்றிவிடுங்கள். இல்லையென்றால் நாங்களே அகற்றிவிடுவோம், மேலும் அதற்குண்டான செலவு மொத்தத்தையும் நீங்களே செலுத்த வேண்டும் என்று தெரிவித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் கோயில் இடிப்பதாக தகவல் அறிந்த வள்ளிவிளை, குருந்தான்விளை, செந்தாமரைவிளை, காணியாளன்புதூர், கானம், உடன்குடி, சோனகன்விளை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று கொட்டும் மழையில் கோயில் முன் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே கோயிலை அகற்ற வருவதாக இருந்த பொதுப்பணித் துறையினர் நேற்று வரவில்லை.
இருப்பினும் பொதுப்பணித் துறையினர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் பொதுமக்கள் மாலை வரை கோயில் முன்பு திரண்டிருந்தனர். இதில் சாமிதோப்பு தலைமைபதி வாகனதாரர் தங்கமகன், பாஜ ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் வினோத் சுப்பையன், மகளிரணி மாவட்ட செயலாளர் தங்கரதி, வள்ளிவிளை லிங்கத்துரை, வெற்றிவேல், பார்வதி முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.