» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணைத் தாக்கி நகை பறித்தவருக்கு 2ஆண்டு சிறை : நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 29, நவம்பர் 2022 8:18:22 AM (IST)
கழுகுமலை அருகே பெண்ணைத் தாக்கி தங்க நகையைப் பறித்துச் சென்றவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கோவில்பட்டி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை ஓம்சக்தி நகரைச் சோ்ந்த காளிதாஸ் மனைவி சாந்தி (36). இவா்தன்னிடம் இருந்த உடைந்த தங்க கம்மலைச் சரிசெய்ய, நகைக் கடைக்கு 2021 மே 10 ஆம் சென்றுள்ளாா். கம்மலை சரி செய்ய 2 மணி நேரம் ஆகும் எனக் கூறியதையடுத்து, அங்கிருந்து புறப்பட்டுள்ளாா். அப்போது கடையிருந்த நபா், தனது அண்ணனின் கடையில் நகையைச் சரிசெய்து தருவதாக சாந்தியுடம் கூறியுள்ளாா். இதை நம்பி, அவருடன் பைக்கில் சென்றுள்ளாா்.
கழுகுமலை - கோவில்பட்டி சாலை காளாங்கரைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பைக்கை நிறுத்திய அந்த நபா், சாந்தியை தாக்கி அவா் அணிந்திருந்த நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டாா். இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின்பேரில், சுரண்டை காவல் நிலையத்திற்கு உள்பட்ட வெள்ளைக்கல் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் திருமலைகுமாரை கைது செய்தனா். இந்த வழக்கு கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் (எண் 1) விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நடுவா் கடற்கரை செல்வம், குற்றஞ்சாட்டப்பட்ட திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.