» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி மாடியில் இருந்து குதித்த பிளஸ்-1 மாணவி தற்கொலை முயற்சி
செவ்வாய் 29, நவம்பர் 2022 7:59:00 AM (IST)
எட்டயபுரத்தில் பள்ளி மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான மாணவி, எட்டயபுரத்தில் உள்ள பள்ளி விடுதியில் தங்கியிருந்து பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவியின் தாயார் நேற்று பள்ளிக்கு சென்று, மாணவியை நன்றாக படிக்குமாறு அறிவுறுத்தினார். இதனால் மனமுடைந்த மாணவி மாலையில் பள்ளியின் முதலாவது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதில் பலத்த காயமடைந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியது.