» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மும்முனை மின்சாரம் வழங்காததால் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு : கிராம மக்கள் புகார்
திங்கள் 28, நவம்பர் 2022 3:04:01 PM (IST)
புளியம்பட்டி பகுதியில் மும்முனை மின் சப்ளை முறையாக வழங்காததால் தொழில் நிறுவனங்கள் முடங்கி கிராம மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புளியம்பட்டி கிராம மக்கள் அளித்த மனு : எங்களது கிராமத்திற்கு புதுக்குடி காரசேரி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் கொடுக்கபட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக 3 பேஸ் மின் சப்ளை முறையாக வருவதில்லை. காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 2மணி வரையும் இரவு 1 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரையிலும் 3 பேஸ் மின் சப்ளை உத்தரவாதம் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. சில நேரம் அதுவும் இல்லை.
மேலும் 10 நாட்களுக்கு ஒரு முறை பகலில் முழு நேர மின்தடை என்று சொல்லி மின் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் ,ஓட்டுடன்பட்டி, நா.புதூர் நாரைக்கிணறு, கைலாசபுரம் கொடியன்குளம், கீழக்கோட்டை, கலப்பபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. பகலில் 5 மணி நேரமும் இரவில் 5 மணி நேரமும் மட்டும் 3 பேஸ் மின் சப்ளை கொடுக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் காற்றாலை உற்பத்தி தேவைக்கு அதிகமாக கிடைப்பதாக நாள்தோறும் செய்தி வருகிறது.
ஆனால் இங்கு 3 பேஸ் மின் சப்ளை இருப்பதில்லை. இரவில் தோட்ட வேலை செய்ய இயலாது. பகலில் சிறு தொழில் நிறுவனங்களில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் சிறு-குறு நிறுவனங்களில் வேலை செய்யும் கிராம மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகிறார்கள். போதிய விவசாய உற்பத்தி செய்ய முடியாமல் கிராம மக்கள் வறுமை பிடியில் சிக்கி வருகின்றார்கள். தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலகங்களில் இருந்தும் முறையான தகவலும் கிடைப்பதில்லை. எனவே முறையான மும்முனை மின் விநியோகத்திற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sathish KumarNov 28, 2022 - 09:50:33 PM | Posted IP 162.1*****