» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பச்சிளம் பெண் குழந்தையை ரோட்டில் வீசிய மர்ம நபர்கள் : போலீஸ் விசாரணை!
புதன் 5, அக்டோபர் 2022 4:26:08 PM (IST)
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அருகே பச்சிளம் பெண் குழந்தையை ரோட்டில் வீசிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரன் பட்டினத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் முத்தாரம்மன் கோயிலில் இருந்து கடற்கரை செல்லும் வழியில் உள்ள மாடசாமிபுரம் ரோட்டில், பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை துணியில் சுற்றி வீசி விட்டு சென்றுள்ளனர்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த வழியாக வந்த பக்தர்கள் அளித்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்ட செவிலியர்கள், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி பச்சிளம் பெண் குழந்தையை வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பச்சிளம் பெண் குழந்தை சாலையில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.