» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள்: கடைக்கு சீல் வைப்பு
வியாழன் 29, செப்டம்பர் 2022 7:14:13 AM (IST)
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் வடக்கு மண்டல உதவி ஆணையர் தனசிங், சுகாதார நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார அலுவலர் அரிகணேஷ் மற்றும் ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த கடை உரிமையாளருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் சோதனையில் ஈடுபட்ட மாநகராட்சி தற்காலிக ஊழியர் ஒருவரை கடை உரிமையாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடை மற்றும் அருகில் இருந்த குடோனுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து வடபாகம் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.