» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்டவிரோதமாக கிராவல் மண் எடுக்க தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

புதன் 28, செப்டம்பர் 2022 3:59:39 PM (IST)

ஒட்டப்பிடாரம் அருகே குவாரியில் சட்டவிரோதமாக கிராவல் மணல் எடுக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா கப்பிகுளம் பகுதியைச் சேர்ந்த பாபு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் "தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா மூலக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட புளியங்குளம் கண்மாயில் குவாரி அமைத்து, கிராவல் மண் எடுக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டது. 

இந்த கிராவல் மண்ணை திருச்செந்தூரில் இருந்து அம்பாசமுத்திரம் வரை தொழில் வழிச்சாலை அமைப்பதற்கு பயன்படுத்த 25.2.2022 வரை காண்டிராக்டர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால் சாலை அமைக்க கிராவல் மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, இரவும், பகலும் புளியங்குளம் கண்மாயில் இருந்து கிராவல் மண்ணை அள்ளிச்சென்றனர். இதற்காக கண்மாயில் இருந்த பாசனத்திற்கு தேவையான தண்ணீரையும் வெளியேற்றினர். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். சாலை அமைக்கும் பணிகள் முடிந்த பின்பும், குறிப்பிட்ட கால அனுமதியை தாண்டி, தற்போதும் அந்த குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையும் கேள்விக்குறியாகி விட்டது.

எனவே புளியங்குளம் குளத்தில் குவாரி செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. இதுதொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 2 மாதம் மட்டும் அவகாசம் அளிப்பதாக கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அந்த அவகாசம் முடிந்தும் பலமாதங்களாக குவாரியில் கிராவல் மண் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கிராவல் மண் எடுக்க அனுமதித்த அவகாசம் முடிந்த பின்பும் சட்டவிரோதமாக எதன் அடிப்படையில் மண் அள்ளப்படுகிறது? இதை ஏற்க இயலாது. அந்த குவாரியில் கிராவல் மண் எடுக்க இடைக்கால தடை விதிக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory