» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடியில் திட்டப்பணி : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
புதன் 28, செப்டம்பர் 2022 3:30:19 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடியில் மெகா திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிழா நாட்கள் மட்டுமின்றி தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் கோவிலில் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பதியை போன்று பக்தர்கள் அமர்ந்து சென்று தரிசனம் செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ. 300 கோடி செலவில் பக்தர்களின் வசதிக்காக மெகா மேம்பாட்டு திட்டப்பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. திருச்செந்தூர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்து தற்போது 12 ஆண்டுகள் கடந்த நிலையில் மகா கும்பாபிஷேக விழா பணிகளும் ஒருங்கிணைந்து நடைபெற உள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளி பக்தர்களும் கடலில் புனித நீராடி விட்டு, கோவிலில் சாமி தரிசனத்துக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் மெகா திட்டப்பணிகளை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், மண்டல இணை ஆணையர் அன்புமணி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Thanks to HCL OwnerSep 29, 2022 - 10:08:37 AM | Posted IP 172.7*****