» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம்: பாதுகாப்பு பணிகளை எஸ்பி ஆய்வு!
திங்கள் 26, செப்டம்பர் 2022 5:10:04 PM (IST)
வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு அம்மன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.
அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, திருச்செந்தூர் அருகே அம்மன்புரத்தில் உள்ள நினைவிடத்தில் அவரது குடும்பத்தின் சார்பில் பொங்கல் வைத்து, படையல் படைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் விளக்கு பூஜையும் நடந்தது.
இதில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவரும், பனங்காட்டு மக்கள் கழக நிறுவனருமான எஸ்.ஏ.சுபாஷ் பண்ணையார், வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவியும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராதிகாசெல்வி, உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்.வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
வெங்கடேஷ் பண்ணையார்நினைவு தினத்தை முன்னிட்டு அம்மன்புரம், மூலக்கரை மற்றும் ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் இன்று (26.09.2022) 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு உதவி காவல் கண்காணிப்பாளர், 15 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 56 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசாரின் பாதுகாப்பு பணிகளை அம்மன்புரம், மூலக்கரை மற்றும் ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், ஸ்ரீவைகுண்டம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.