» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கடைகளில் கொள்ளையடித்த 3பேர் கைது : பணம், பொருட்கள் பறிமுதல்!
வெள்ளி 1, ஜூலை 2022 10:19:59 AM (IST)
தூத்துக்குடியில் கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்த 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் முள்ளக்காடு, ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பெருமாள் (39) என்பவர் தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 29.06.2022 அன்று இரவு கடையின் பூட்டை உடைத்து ரூ.30ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
அதேபோன்று அன்றைய தினமே தூத்துக்குடி பிரையண்ட் நகர் 7வது தெருவை சேர்ந்த பாண்டி மகன் பரமேஸ்வரன் (54) என்பவருக்கு சொந்தமான பிரையண்ட் நகர் 3வது தெருவில் உள்ள மளிகை கடையிலும் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து ரூ.10ஆயிரம் பணத்தையும், ரூ.2ஆயிரம் மதிப்புள்ள கைகடிகாரத்தையும் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கடை உரிமையாளர்கள் நேற்று அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராம்குமார் (22), அழகேசபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பாண்டியராஜ் மகன் பாஸ்கர் (23) மற்றும் 2வது ரயில்வே கேட் பகுதியை சேர்ந்த முத்து மகன் செல்வராஜ் (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து மளிகை கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து 2 கடைகளிலும் திருடப்பட்ட மொத்தம் ரூ.36ஆயிரம் பணத்தையும் கைகடிகாரத்தையும் பறிமுதல் செய்தார்.
கைது செய்யப்பட்ட ராம்குமார் மீது ஏற்கனவே தென்பாகம் மற்றும் மத்திய பாகம் காவல் நிலையங்களில் 4 வழக்குகளும், செல்வராஜ் மீது தென்பாகம் மற்றும் வடபாகம் ஆகிய காவல் நிலையங்களில் 4 வழக்குகளும், பாஸ்கர் மீது தூத்துக்குடி வடபாகம் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையங்களில் 4 வழக்குகளும் உள்ளது. மளிகை கடைகளில் பூட்டை உடைத்து திருடிய 3பேரை கைது செய்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.
அன்புJul 3, 2022 - 05:47:22 PM | Posted IP 162.1*****