» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கண்டெய்னர் லாரி - கார் மோதல்: டிராவல்ஸ் அதிபர் பலி - தூத்துக்குடியில் சோகம்!
திங்கள் 16, மே 2022 10:58:01 AM (IST)
தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம், நடுவகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சற்குணம் மகன் அந்தோணி சார்லஸ் (37). கார் டிரைவர். சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் இன்று காலையில் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே திருப்பூரில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துகொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது இவரது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த அந்தோணி சார்லஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் கார் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்து காரணமாக டோல் கேட் அருகே சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த புத்தியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து புத்தியம்புத்தூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகம் வழக்குப் பதிந்து, லாரியை ஓட்டி வந்த அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் கோமதி விநாயகம் (41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.