» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் : ஆட்சியர் எச்சரிக்கை!
திங்கள் 25, ஏப்ரல் 2022 3:46:51 PM (IST)
தூத்துக்குடியில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி குரூஸ் பர்னாந்தீஸ் சிலை அருகில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இன்று தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: விபத்து இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஒவ்வொரு மாதமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோருடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை இணைந்து விபத்தில்லா தூத்துக்குடியை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
மாதம்தோறும் சீட் பெல்ட் அணிதல், ஹெல்மெட் அணிதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த மாதம் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நமது மாவட்டத்தில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மொபைல் போன் பயன்படுத்திய வண்ணம் வாகனங்களை இயக்குவதை கண்டறிந்து அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.
வாகனங்களில் செல்லும்போது மொபைல் போனில் அழைப்புகள் வந்தால் சாலையோரம் வாகனத்தினை நிறுத்தி பேசிவிட்டு பின்னர் செல்ல வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், வட்டாட்சியர் செல்வக்குமார், வாகன போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் (நிலை I) பெலிக்ஸ் மாசிலாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.