» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மேயர் பதவி பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு: பெண்களுக்கு 16 பேரூராட்சி தலைவர் பதவிகள்!
புதன் 19, ஜனவரி 2022 10:54:26 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 18 பேரூராட்சிகளில் 16 பேரூராட்சிகளின் தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை பணிகள் முடித்து, இட ஒதுக்கீட்டை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து, அரசிதழில் அதன் விவரங்கள் வெளியிடப்பட்டன.
அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் கோவில்பட்டி, காயல்பட்டினம் ஆகிய நகராட்சி தலைவர் பதவிகள் பொதுப் பிரிவினருக்கும், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் பதவி பொதுப் பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 18 பேரூராட்சிகள் உள்ளன. இதில் ஆத்தூர், விளாத்திகுளம் ஆகிய பேரூராட்சி தலைவர் பதவிகள் மட்டும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆறுமுகநேரி, ஏரல், எட்டயபுரம், கழுகுமலை, நாசரேத், சாத்தான்குளம், சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம், உடன்குடி, ஆழ்வார்திருநகரி, கடம்பூர், கயத்தாறு, புதூர், கானம், பெருங்குளம், தென்திருப்பேரை ஆகிய 16 பேரூராட்சி தலைவர் பதவிகளும் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளும் பொது மற்றும் பொது பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.