» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அச்சுறுத்தும் ஒமைக்கரான்: களையிழந்த காணும் பொங்கல் - வெறிச்சோடிய சுற்றுலா தளங்கள்!
சனி 15, ஜனவரி 2022 1:10:21 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒமைக்கரான் கரோனா பொது முடக்கம் காரணமாக காணும் பொங்கல் களையிழந்து காணப்பட்டது.
பொங்கல் பண்டிகையை மக்கள் எப்போதும் 3 நாட்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை, மாட்டுப்பொங்கல், அதற்கு மறுநாள் காணும் பொங்கல் என கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். குறிப்பாக காணும் பொங்கல் தினத்தன்று கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு பூங்காக்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு பொழுதை போக்குவார்கள்.
தூத்துக்குடியில் முயல்தீவு, துறைமுக கடற்கரை, முத்துநகா் கடற்கரை, ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, டூவிபுரம் பூங்கா, மில்லா்புரம் பூங்கா ஆகிய இடங்கள், திருச்செந்தூா் கடற்கரை, மணப்பாடு, குலசேகரபட்டினம் கடற்கரை, அம்மன்புரம் அருகே அருஞ்சுனைகாத்த அய்யனாா் கோயில் சுனை, மருதூா் அணைக்கட்டு, வல்லநாடு நீா்த்தேக்கம், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, எட்டயபுரம் பாரதி நினைவகம், உள்ளிட்ட இடங்களுக்கு காணும் பொங்கல் தினத்தில் பொதுமக்கள் செல்வது வழக்கம்.
நிகழாண்டு ஒமைக்கரான் கரோனா பொது முடக்கம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கண்ட இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் சுற்றுலா தளங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான உற்சாகத்துடன் காணும் பொங்கலை மக்கள் கொண்டாட முடியவில்லை. தற்காலிக கடைகள் அமைக்கும் சிறு வியாபாரிகளும், சாலையோர வியாபாரிகளும் பாதிப்படைந்தனா். காணும் பொங்கலை முன்னிட்டு மாவட்டத்தில் எஸ்.பி. ஜெயக்குமாா் உத்தரவின்பேரில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.