» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணியில் விபத்து: வாலிபர் பரிதாப சாவு - மற்றொருவர் படுகாயம்
வியாழன் 23, செப்டம்பர் 2021 10:16:27 AM (IST)
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணியின் போது மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக தளவாட பொருட்கள் அடங்கிய கண்டெய்னர் பெட்டியை ஜெயராஜ் ரோட்டில் இருந்து சுந்தரேவல் புரத்திற்கு நேற்று இரவு 11 மணியளவில் கிரேன் மூலம் கொண்டு சென்றுள்ளனர். கிரேனை தூத்துக்குடி கோரம்பள்ளம் பிஎஸ்பி நகரைச் சேர்ந்த மும்மது உசேன் மகன் செய்யதலி பாதுஷா (35) என்பவர் இயக்கிச் சென்றார்.
மேலும், தனியார் கட்டுமான நிறுவனத்தின் தொழிலாளர்களான குறுக்குச்சாலை எஸ் குமாரபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் மகன் காமாட்சிநாதன் (22), திரேஸ்புரத்தைச் சேர்ந்த லீஸ்டன் மகன் ஜோயல் (33) ஆகிய இருவரும் கண்டெய்னர் பெட்டியின் பக்கவாட்டில் பிடித்தவாறு சென்றுள்ளனர். தூத்துக்குடி 3வது ரயில் மேம்பாலத்தில் கிரேன் சென்றபோது, மேலே சென்ற உயர் அழுத்த கம்பியில் உரசியதில் ரோப் அறுந்து விழுந்ததுள்ளது.
அப்போது கண்டெய்னர் பெட்டியில் மின்சாரம் ஊடுறுவியதால் காமாட்சி நாதன், ஜோயல் ஆகியோரின் உடலில் மீன்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். இதில், காமாட்சி நாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜோயல் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காமாட்சி நாதனின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ஜோயல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.