» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குஜராத்தில் பூபேந்திர படேல் அமைச்சரவை பதவியேற்பு: ஜடேஜாவின் மனைவி அமைச்சரானார்
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:21:52 PM (IST)
குஜராத்தில் பூபேந்திர படேல் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவும் அமைச்சராக பதவியேற்றார்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன் மூலம் பூபேந்திர படேல் 2-வது முறையாக முதல்-அமைச்சர் பதவியை தக்க வைத்தார். அவரது அமைச்சரவையில் 16 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் 8 பேர் கேபினட் அந்தஸ்துடனும், மீதமுள்ளவர்கள் இணை அமைச்சர்களாகவும் இருந்தனர்.
பூபேந்திர படேல் அமைச்சர்சபையில் இணை அமைச்சராக இருந்த ஜகதீஷ் விஸ்வகர்மா இந்த மாத தொடக்கத்தில் மாநில பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டார். மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் வசம் இருந்த பா.ஜ.க. தலைவர் பதவி, மாநில அமைச்சரிடம் வழங்கப்பட்டது. குஜராத் சட்டசபை 182 உறுப்பினர்களை கொண்ட நிலையில், மாநில அரசில் 27 பேர் அல்லது மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 15 சதவீதம் பேர் அமைச்சர்களாக பதவி வகிக்க முடியும்.
அந்த வகையில் மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுவதாக நேற்று காலையில் மாநில அரசு தகவல் வெளியிட்டது. அதற்கு வசதியாக முதல்-அமைச்சர் பூபேந்திர படேலை தவிர அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 16 அமைச்சர்களும் மாலையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து புதிய அமைச்சரவை இன்று காலையில் பதவியேற்றது.
ரிவாபா ஜடேஜா, ஸ்வரூப் தாக்கூர், பிரவின்பாய் மாலி, தர்ஷ்னா வகேலா, அர்ஜுன் மோத்வாடியா, ஜிதேந்திர வகானி உள்ளிட்ட 21 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவும் அமைச்சராக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்த ரிவாபா, 2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த பதவியேற்பு விழாவில் பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். கனுபாய் மோகன்லால் தேசாய், ருஷிகேஷ் படேல், குன்வர்ஜி பவாலியா மற்றும் பர்ஷோத்தம் சோலங்கி ஆகிய நான்கு அமைச்சர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்கள் அமைச்சரவையில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் முதல்-அமைச்சர் பூபேந்திர படேலை சேர்ந்து அமைச்சரவையின் அளவு 26 ஆக அதிகரித்துள்ளது.
சூரத்தைச் சேர்ந்த முக்கிய இளம் தலைவரும், குஜராத்தின் முன்னாள் உள்துறை இணை அமைச்சருமான ஹர்ஷ் சங்வி துணை முதல்-அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு வயது 40. இதன் மூலம் குஜராத் மாநில வரலாற்றில் குறைந்த வயதில் துணை முதல்-அமைச்சர் பதவியை வகிக்கும் நபர் என்ற அவர் பெருமையைப் பெற்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை!
சனி 11, ஏப்ரல் 2026 4:54:44 PM (IST)

உத்தரப் பிரதேசத்தில் பெருந்துயரம்: படகு கவிழ்ந்து பஞ்சாப் சுற்றுலா பயணிகள் 10 பேர் பலி!
சனி 11, ஏப்ரல் 2026 3:59:52 PM (IST)

மும்பை விமான நிலையத்தில் 29 கிலோ தங்கம் பறிமுதல்: 24 வெளிநாட்டுப் பெண்கள் கைது!
சனி 11, ஏப்ரல் 2026 3:55:43 PM (IST)

கட்டுக்கட்டாகப் பணம் எரிந்த விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:23:06 PM (IST)

ஊழல்வாதிகள் சிறைக்குச் செல்வது உறுதி: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:05:47 PM (IST)

கேரளத் தேர்தல்: அரசுக்கு எதிராகக் கருப்புச் சட்டை அணிந்து சாண்டி உம்மன் போராட்டம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 12:53:42 PM (IST)







