» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய பணத்தின் நேர்மையில் சந்தேகம் : ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்

செவ்வாய் 30, மே 2023 5:15:03 PM (IST)

இந்திய பணத்தின் மீதான நேர்மையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக  ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ரிசர்வ் வங்கி சமீபத்தில் புழக்கத்தில் இருந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மும்பை வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் ஆட்சியும், கொள்கையும் அனைத்து அலைகளையும் தாங்கி நிற்கும் படகை உருவாக்க வேண்டும். 

அந்த வகையில் கடந்த 9 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. கொடுமை என்னவென்றால் அரசு தனது தவறுகளை சரிசெய்து அனைத்து மக்களுக்குமான ஆட்சியை செய்ய முயற்சி எடுக்கவில்லை. ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தியது மற்றும் அதை திரும்ப பெற்றது இந்திய பணத்தின் மீதான நேர்மை மற்றும் ஸ்திரத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2022-23-ம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் வளர்ச்சி சதவீதம் முறையே 13.2, 6.3 மற்றும் 4.4 என சரிவை நோக்கி செல்கிறது. 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த சராசரி 9 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டுவது தற்போதைய நிலையில் வெகு தொலையில் உள்ளது.

அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம், தொடர் பணவீக்கத்தால் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தடுமாற்றத்தில் இருக்கும் நலத்திட்டப்பணிகள் குறித்து மிக கடுமையான கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளன. நாடு தழுவிய வேலையின்மை விகிதம் தற்போது 7.45 சதவீதமாக உள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் நுகர்வு குறைந்துள்ளது.

அதுமட்டும் இன்றி பொதுமக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் அரசின் அச்சுறுத்தல் மற்றும் வழக்குகள் மூலம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இயற்கை நீதிக்கு பதிலாக தற்போது புல்டோசர் நீதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிர்மலா சீதாராமன் கண்டனம்

ரூ.2 ஆயிரம் நோட்டு அறிமுகம் மற்றும் வாபஸ் நடவடிக்கை நமது பணத்தின் நேர்மை மற்றும் ஸ்திரத்தன்மை மீதான சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

அவரின் கருத்து குறித்து மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் ப.சிதம்பரத்துக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

பண மதிப்பிழப்பு, மத்திய வங்கியின் முடிவு போன்றவை குறித்து அனுமானத்தை வெளியிடுவது முன்னாள் நிதி மந்திரிக்கு அழகு அல்ல. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 10 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்தது. அந்த ஆட்சிகாலத்தில் பெரும்பகுதி ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்துள்ளார். நாங்கள் பாராளுமன்றத்தில் அவரிடம் பல கேள்விகளை எழுப்பி உள்ளோம். அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. நாம் அனைவரும் நிலைமையை புரிந்துகொள்ளவேண்டும். அவர் தான் வகித்த பொறுப்புக்கு ஏற்றவாறு கருத்துகளை வெளியிடுவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory