» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஹைதராபாத் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்து ரசித்த ஆளுநர் தமிழிசை!
திங்கள் 26, செப்டம்பர் 2022 4:22:07 PM (IST)
ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டி20 போட்டியை நேரில் கண்டு ரசித்த தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இந்தத் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. நேற்று ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றவாது டி20 போட்டி தொடரின் வெற்றியாளரை முடிவு செய்யும் போட்டியாக அமைந்தது. கிட்டத்தட்ட ஒரு ஃபைனல் போட்டியை போல இருந்தது. போட்டியை நேரில் கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்திருந்தனர். அவர்களில் ஒருவராக ஆளுநர் தமிழிசையும் இருந்தார்.
"தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்த்தேன். மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை வென்று நம் தாய் திருநாட்டிற்கு பெருமை சேர்த்த நம் இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தங்களது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை வெற்றி பெறச் செய்த வீரர்கள் சூர்யகுமார் யாதவ், விராட் கோலி மற்றும் அனைத்து வீரர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டியை காண நேரில் அழைப்பு விடுத்த ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.