» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிஹாரில் திடீர் ஆட்சி மாற்றம் : பாஜக கூட்டணி முறிவு; காங்கிரசுடன் கைகோர்க்கும் நிதிஷ்..!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 4:02:21 PM (IST)
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) - பாஜக கூட்டணி முறிந்தது. முதல்வர் நிதீஷ் குமார் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் பகு சௌஹானிடம் அளித்தார்.
பிஹார் முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார் இன்று தனது கட்சி எம்எல்ஏக்களுடன் பாட்னாவில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில், ஜேடியு - பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாக முறைப்படி அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் கைகோத்துள்ள நிதிஷ் குமார், 161 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் இன்று மாலை ஆளுநரை சந்திக்கவுள்ளார். புதிய அரசில் நிதிஷ் குமார் முதல்வராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் இருப்பார் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவை சபாநாயகர் பதவி ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.
முதல்வர் நிதிஷ் குமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, ஆட்சி மாற்றம் தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் துணைத் தலைவர் சிவானந்த் திவாரி நேற்று கூறும்போது, "பாஜகவை எதிர்த்து போரிடுவதில் ஆர்ஜேடி உறுதியாக உள்ளது. இந்தப் போரில் இணைவது என நிதிஷ் குமார் முடிவு செய்தால், அவரை எங்கள் அணியில் சேர்த்துக் கொள்ள தயாராக உள்ளோம்” என்றது குறிப்பிடத்தக்கது.