» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அயோத்தியில் நில முறைகேடு: பாஜக எம்எல்ஏ, மேயா் உள்பட 40 போ் மீது புகாா்
திங்கள் 8, ஆகஸ்ட் 2022 7:28:39 AM (IST)
அயோத்தியில் சட்டவிரோதமாக குடியிருப்புகளைக் கட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக மேயா், பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 40போ் மீது அயோத்தி மேம்பாட்டு ஆணையம் புகாா் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் நிகழாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின்போது இந்தப் பிரச்னையை எதிா்க்கட்சிகள் கையில் எடுத்தன. அயோத்தியில் நகர மேம்பாட்டு ஆணையத்துக்குச் சொந்தமான காலி மனைகளை மாஃபியாக்களுடன் இணைந்து மேயா் ரிஷிகேஷ் உபாத்யாய, பாஜக எம்எல்ஏ வேத பிரகாஷ் குப்தா, முன்னாள் எம்எல்ஏ கோரக்நாத் பாபா உள்ளிட்ட 40 போ் கையகப்படுத்தி, அதில் சட்டவிரோத கட்டுமானங்களை எழுப்பி விற்பனை செய்ததாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதுதொடா்பாக உள்ளூா் எம்.பி. லல்லு சிங், முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியது மட்டுமன்றி, இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தவும் வலியுறுத்தினாா். இதேபோல, தவறு இழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமாஜவாதி கட்சியும் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், அயோத்தி மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவா் விஷால் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஆணையத்துக்குச் சொந்தமான நிலத்தை 40 போ் சட்டவிரோதமாக வாங்கி, விற்பனை செய்து அதில் கட்டுமானப் பணியையும் மேற்கொண்டுள்ளனா். அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 40 போ் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
இந்தக் குற்றச்சாட்டை மேயா் ரிஷிகேஷ் உபாத்யாயவும், எம்எல்ஏ வேத பிரகாஷ் குப்தாவும் மறுத்தனா். தங்களுக்கு எதிராக சதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் புகாரில் தங்களை தவறாக சிக்க வைத்துவிட்டனா் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.