» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மடாதிபதி நரேந்திர கிரி தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு
செவ்வாய் 21, செப்டம்பர் 2021 3:57:40 PM (IST)
மடாதிபதி நரேந்திர கிரி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பாரதிய அகார பரிஷத் (ஏபிஏபி) மடத்தின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகழ் பெற்ற மடத்தின் தலைவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. நரேந்திர கிரி தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் 5 பக்க தற்கொலை கடிதத்தை கைப்பற்றி உள்ளனர்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்த படி முக்கிய சீடர்களில் ஒருவரான ஆனந்த் கிரி மற்றும் சீடர்கள் சந்தீப் திவாரி, அதயா திவாரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் நரேந்திர கிரி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அகில பாரதிய அகார பரிஷத் துணைத்தலைவர் தேவேந்திர சிங், அலகாபாத் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
தேவேந்திர சிங் சார்பில் வக்கீல் சுனில் சவுத்ரி தாக்கல் செய்துள்ள மனுவில் நரேந்திர கிரியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. இதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார். நரேந்திர கிரி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நரேந்திர கிரியின் உடலுக்கு உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.